Tuesday 28 February 2017

அவன்!

கசிவது அவள் 
        கண்ணீர் தான்,
காய்வது அவள்
        மனம் தான்,
கழிப்பது அவள் 
        காலம்  தான்,
கண்முன்னே அவன்
        பிம்பம் தான்,
கதையில் அவன்
        பெயர் தான்,
கவிதையில் அவன் 
        குறிப்பு தான்,
கனவிலும் அவன் 
        நினைவு தான்,
காத்திருப்பதும் 
         சுகம் தான்,
காதலில்
 அவன்  
      மட்டுமே இருப்பதால்!!

Monday 20 February 2017

நேற்று நந்தினி! நாளை ?

இரவல் வாங்கித்தான் 
இளந்தளிர் அவள் வளர்ந்தாள்!
படுக்கையில் போன 
தகப்பனின்  உயிர் !
பாதியில் நின்று 
போன படிப்பு !
பகுதி நேரக்
கூலியானாள்!
மீதி நேரக் 
காதலியானாள்!
அவனை நம்பி 
அவளையே கொடுத்தாள்!
மனம் புரிய சென்றவள் 
விருந்தாக்கப்பட்டாள்
அவன் நண்பர்களுக்கு !
அடங்கா 
ஜாதி வெறி, 
படுக்கும் பொழுது 
பார்க்காத தீண்டாமை,
உரிமை கேட்கும்போது 
ஒடுக்க படுகிறாள் !
யாதுமாகி வந்தவள் 
யாவரும் காண முடியா,
மண் தின்னும் சவமானாள்!
நித்தமும் நூறு பிழைகள் 
அரங்கேறும் நாடக மேடை இது !
இன்று அவள் பெயர் வெளிச்சத்தில்,
நாளை வேறு ஒருத்தி !
அவள் சென்று விட்டாள்
அவளின் துயரங்களை 
கிணற்று புழுக்களிடம்
      பகிர்ந்து விட்டு !
செய்தியாகி போனாள்
நமக்கும் !
வலியாகிப் போனாள் 
பெற்றவளுக்கு மட்டுமே  ! 



அவள் வளர்ந்த சூழ்நிலையா?

சூழ்நிலையினால் விளைந்த காதலா?
காதலால் வளர்ந்த மோகமா ?
மோகத்தினால் விளைந்த மோதலா ?
மோதலால் தலைதூக்கிய ஆத்திரமா?
ஆத்திரத்தினால் அரங்கேறிய நிகழ்வுகளா?
அவளே அறிவாள்!